Thursday, August 20, 2009

அவ்வையார் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பு

அவ்வையார் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பு
 
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி.சுந்தராம்பாள்.
 
"சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றிருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட்ஜெட்டில் சிறந்த முறையில் தயாரிக்க விரும்பி அவ்வையாராக நடிக்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக்கொண்டார். நீண்ட யோசனைக்குப்பிறகு சுந்தராம்பாள் ஒப்புக்கொண்டார்.
 
படத்தயாரிப்பு சுமார் ஐந்தாண்டுகள் நீடித்தது. படம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராகச் செலவழித்தார், வாசன். உழைப்பும், திறமையும், செலவும் வீண் போகவில்லை. 1953_ல் வெளிவந்த "அவ்வையார்", ஒரு உன்னத காவியமாக அமைந்தது. அவ்வையாராகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள். அவருடைய பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களைத் தொட்டன. சுருக்கமாகச் சொன்னால் கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச் சிறந்த 10 படங்களை இன்று தேர்ந்தெடுத்தால், அதில் அவ்வையாருக்கு நிச்சயம் இடம் உண்டு.
 
இப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு டைரக்ட் செய்திருந்தார்.
 
பிறகு கலைஞர் கருணாநிதி தயாரித்த "பூம்புகார்" படத்தில் (1964) கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த "திருவிளையாடல்" படத்தில் (1965) அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.
 
திருவிளையாடல் மகத்தான வெற்றிப்படம். அந்த வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பக்கபலமாக இருந்தன. பிறகு மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் நடித்தார்.
 
அதன்பின் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த "சக்திலீலை" என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்த கடைசி படம் இது.
 
1980_ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இருதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.
 
செப்டம்பர் 19_ந்தேதி அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
 
டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. இரவு 9_30 மணிக்கு இசையரசி மறைந்தார். அப்போது வளர்ப்பு மகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.
 
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
 
"கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
 
அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.
 
சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200_க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய "ஞானப்பழத்தைப் பிழிந்து" என்ற பாடலையும் "தனித்திருந்து வாழும் தவமணியே" என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.
 
தேசியவாதியான அவர், பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது "பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே" என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது "உன்னை மறந்திடப்போமா" என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது "உத்தமராம் காந்தியை" என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.
 
மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937_ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார்.
 
மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ்.
 
"எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?" என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை கட்சி நிதியில் ëசேர்த்துவிட்டார்.
 
1958_ல் காமராஜர் முதல்_அமைச்சராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு "பத்மபூஷன்" விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் "ஏழிசை வல்லபி" என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் "இசைப் பேரறிஞர்" பட்டத்தையும் வழங்கின.

No comments:

Post a Comment