Sunday, August 23, 2009

பராசக்தி 1952

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்பண்டரிபாய் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பராசக்தி
இயக்குனர்ரா.கிருஷ்ணன்,சா.பஞ்சு
கதைமு.கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்,பண்டரிபாய் ,எஸ்.எஸ் ராஜேந்திரன் ,
வெளியீடு நாட்கள்1952
கால நீளம்188 நிமிடங்கள்
மொழிதமிழ்


நாடகப்படம்


பராசக்தி

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான்.இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.

சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது. "இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது எவ்வளவு உண்மை. இவனுங்கள எல்லாம் இட்லி சுட்டு படிக்க வெச்சனே, இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்தக்கூட யோசிக்கறானுங்களேனு வயசான பாட்டிங்க அவுங்க பசங்களை திட்டி கேள்விப்பட்டுருக்கேன்.

படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான், ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.

போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.

அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள். அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.

கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அந்த கேடு கெட்டவனுக்கு பாரதிதாசனின் புத்தகங்கள் ஒரு முகத்திரை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.

பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.

பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். சுபம்...

இனி படத்தில் மனதை தொட்ட காட்சிகள்...

- குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?

- பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை வேண்டுமென்று போராட்டம் நடுத்த போவதாக சொல்கிறார் ஞானசேகரன். அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்

- ஓ ரசிக்கும் சீமானே பாடலும், புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- காசை பற்றி வரும் பாடலில் இந்த வரிகள் அருமையிலும் அருமை... இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடுடா தாண்டவக்கோனே

முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
சில முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பணம் பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே

- போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை

"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"

"ஏய்"

"உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்"

"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"

இதே வசனத்தை இன்றும் படத்தில் வைக்கலாம். நல்ல கைத்தட்டல் கிடைக்கும். பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.

- படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள். ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார். அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன். முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.

- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை. முற்பிறவியில் செய்த கருமவிணைகளால் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பின் தேவியின் சந்திக்கு கல்யாணி சென்ற பிறகு நடக்கும் பல மாற்றங்களால் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியின் குழந்தை இறக்காததும் அவள் அருளே. இந்த கஷ்டங்களை அவர்கள் அனுபவிப்பதாலே ஏழைகளுக்கு உதவ வேண்டும், சமத்துவம் மலர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக முயல்கிறார்கள். இதை பண்டரிபாய் நடிகர் திலகத்திற்கு சொல்லும் இடம் அருமை.

- இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது. என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்?

- இன்று இதே படத்தை சூர்யாவையோ, விக்ரமையோ போட்டு எடுக்கலாம். இட்லிக்கடைக்கு பதில் கட்டட வேலைக்கு செல்வதாக காட்டலாம். வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.




No comments:

Post a Comment