சகுந்தலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.எல்லிஸ் டங்கனின் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துசியந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.
சகுந்தலை | |
![]() | |
இயக்குனர் | எல்லிஸ் ஆர். டங்கன் |
---|---|
நடிப்பு | எம். எஸ். சுப்புலட்சுமி ஜி. என். பாலசுப்பிரமணியம் செருக்களத்தூர் சாமா டி. பி. எஸ். மணி கல்யாணம் ரமணி என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். துரைராஜ் சங்கர் கே. சாரங்கபாணி ராதா தவமணி தேவி கோல்டன் சாரதாம்பாள் சகுந்தலா தேவி டி. ஏ. மதுரம் |
வினியோகம் | ராயல் டாக்கி டிஸ்ட்றிபியூட்டர்ஸ், மதுரை |
வெளியீடு நாட்கள் | 1940 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1. கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.மகரிஷி கண்ணுவரின் (செருக்களத்தூர் சாமா) ஆச்சிரமத்துக்கு அடுத்த வனத்தில் துஷ்யந்தன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) ஒரு மானைத் துரத்தி வருகிறான். அந்நேரம் சகுந்தலை (எம். எஸ். சுப்புலட்சுமி) தோழிகள் பிரியம்வதை (டி. ஏ. மதுரம்), அனுசூயை (சகுந்தலா பாய்) ஆகியோருடன் மலர்ச்செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறாள். அப்போது அங்கு வரும் துஷ்யந்தனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டவர்கள் காந்தர்வ முறைப்படி திருமணம் புரிகின்றனர். துஷ்யந்தன் தனது மோதிரத்தை சகுந்தலையின் கையிலிட்டு விட்டு ஹஸ்தினாபுரம்செல்கிறான்.
மன்னன் திரும்ப வரவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த சகுந்தலை ஆசிரமத்துக்கு விருந்தினராக வந்த துருவாச முனிவரைக் (டி. பி. எஸ். மணி) கவனிக்கவில்லை. முனிவர் கோபம் கொண்டு "நீ யாருடைய தியானத்தில் என்னை அலட்சியம் செய்தாயோ அவன் உன்னை அடியோடு மறக்கட்டும்" என்று சபிக்கிறார். கவலையில் ஆழ்ந்த சகுந்தலையின் தோழிகள் முனிவரை சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த முனிவரும் கொடுத்த சாபத்திற்கு ஒரு பரிகாரமும் சொல்லிப் போகிறார்.
சகுந்தலை கர்ப்பிணி ஆகிறாள். சகுந்தலையை மகரிஷி கண்ணுவர் ஹஸ்தினாபுரம் அனுப்புகிறார். அவளுடன் அவரது சீடர்கள் சாரங்கரவனும் (ரமணி), சாரத்வதனும் (கல்யாணம்) அன்னை கௌதமியும் (கோல்டன் சாரதாம்பாள்) செல்கின்றனர். ஹஸ்தினாபுரத்தில் துஷ்யந்தனைக் காண்கின்றனர். ஆனால் அவன் சகுந்தலையை அடையாளம் காணவில்லை. அவன் கொடுத்த மோதிரமும் ஆறொன்றில் குளிக்கும்போது தொலைந்து விடுகின்றது. சகுந்தலையுடன் வந்தவர்கள் அவளை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். சகுந்தலை மயங்கி விழ ஒரு மின்னல் தோன்றி மேனகை வந்து சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள்.
வருடங்கள் ஐந்து செல்கின்றன. ஒரு நாள் நகரக் காவலாளி இரு செம்படவர்களைப் (என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்) பிடித்துக் கொண்டு அரசனிடம் வருகிறான். அவர்கள் கடலில் கண்டெடுத்த மோதிரத்தைக் காட்டுகிறார்கள். பழைய நினைவுகள் திரும்பப் பெற்ற துஷ்யந்தன் சகுந்தலையைத் தேடிச் செல்கிறான்.
மரீச்சி ஆசிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்திக்கொண்டு ஐந்து வயது பாலகன் சர்வதமனன் (ராதா) ஓடி வருகிறான். அவனுடன் அளவளாவுகிறான் துஷ்யந்தன். அப்போது அங்கு வந்த சகுந்தலையைக் கண்டு இருவரும் இணைகின்றனர்.
மகரிசி காசியப்பர், இருவரையும் ஆசீர்வதித்து சர்வதமனனுக்கு பரதன்என்ற பெயரையும் இடுகிறார். "அவன் பெயர்ப்பட அந்நாடும் அன்று முதல்பாரத பூமி என வழங்கும்" என்று கூறி வாழ்த்துகிறார்.
2. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்
இப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
- எங்கும் நிறை நாத ப்ரும்மம் (மேரே கிரிதர மெட்டு, எம். எஸ். சுப்புலட்சுமி)
- மனமோகனாங்க அணங்கே (எம். எஸ். சுப்புலட்சுமி. ஜி. என். பாலசுப்பிரமணியம்)
- பிரேமையில் யாவும் மறந்தேனே (எம். எஸ். சுப்புலட்சுமி. ஜி. என். பாலசுப்பிரமணியம்)
- வெகுதூரங் கடல் தாண்டி போவோமே மீன் பிடிப்போமே (என்.எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்)
- இன்னிக்கு காலையிலே எழுந்திருச்சு கஞ்சிதண்ணி இல்லாமலே கஷ்டப்படுகிறேன் கடவுளே (என்.எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்)
No comments:
Post a Comment